எழுத்தாளர் - விஜயமலர்
எழுதிய புதிய படைப்பு - 'வெந்தும் தணியுமோ காதல்..
என்னும் நாவல் இரண்டு பாகமாக விரைவாக உங்களின் கைகளில் தவழ இருக்கிறது.
இந்த நாவலை பிரியா நிலையம்
மிளிர் பதிப்பகம் வாட்ஸ்அப் இலக்கம்: 9443727506
மற்றும் EASWARI LENDING LIBRARY - யிலும் விரைவில் கிடைக்கும்
velachery - 044 - 42038296
புத்தகத்தின் விலை
இந்த நாவலின் கதை சுருக்கம்
ஆசிரியர் - விஜயமலர் எழுதிய சிறு கதை சுருக்கம்
“எதேச்சையாக விழுந்தாயா? இல்லை என்னை மயக்குவதற்காக வேண்டும் என்றே விழுந்தாயா?” என்றான் கிசுகிசுப்பாக.
அதுவரை அவன் கையணைப்பிலும், அவன் நாசியும், உதடுகளும் சொன்ன அந்த அழகிய செய்தியில் தன்னை மறந்து நின்றிருந்தவளுக்கு அவனுடைய அந்தப் பேச்சில் அந்த அழகிய உணர்வு காணாமல் போகச் சட்டென்று அவனை உதறிவிட்டு விலக முயன்றாள். ஆனால் அவனுடைய கரம் அழுத்தமாக அவள் வெற்றிடையைப் பற்றியிருக்க, அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நேயநறுமை.
அவனோ, தன் கரத்தின் அழுத்தத்தை இடையில் கூட்டி,
“இந்த ஆடை கூட என்னை மயக்கத்தானே...?” என்றான் அவள் முகம் பார்த்து. அதைக் கேட்டவளுக்குச் சுரணை வர, அவனை எரிப்பது போலப் பார்த்தாள். மறு கணம் குழம்பினாள். .
அங்கே அவன் உதட்டில் பட்டும் படாமலும் ஒரு குறும்புப் புன்னகை இருந்ததோ? இல்லை அவளுக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா? தடுமாறி நிற்கையில்,
“என்ன பேச்சைக் காணோம்? இந்த ஆடை என்னைக் கவரத்தானே அணிந்தாய்?” என்றான் அவளையே பார்த்தவாறு. அதைக் கேட்டதும் சுருசுரு என்று கோபம் வர, அவனை வேகமாக உதறிவிட்டு விலகி நின்று,
“என்ன உளறல் இது?” சீற்றமாக வந்தது அவளிடமிருந்து. அவனோ கிண்டலாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு விழிகளால் அவளை அணு அணுவாகத் தரிசித்தான். அவனுடைய பார்வை, எங்கெல்லாம் நிலைக்கக் கூடாதோ அங்கெல்லாம் நிலைத்து நிதானமாக இறங்க, வாழ்க்கையில் முதன் முறையாகக் கூச்சத்தை உணர்ந்தாள் நேயநறுமை. தன்னையும் மறந்து அவன் பார்வை தங்கும் இடங்களை மறைக்கும் வேகம் வந்தது. ஆனாலும் இறுக்கமாக நின்றிருக்க அவனோ நிதானமாக அவளுடைய உடலை தரிசித்து விட்டு,
“உளறவில்லை... அறியும் ஆர்வத்தில் கேட்டேன்...” என்றான் அவள் முகத்தில் விழிகளைப் படரவிட்டவாறு.
“உங்களை மயக்க அப்படி என்ன உங்களிடம் கொட்டிக் கிடக்கிறது? ஒன்றும் அந்தளவுக்குப் பெரிய அப்பாடக்கரில்லை... சொல்லப்போனால் இந்த உலகத்தில் நான் வெறுக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டும்தான்... எனக்கு உங்கள் முகத்தைப் பார்க்கவே பிடிப்பதில்லை. அப்படியிருக்கையில், உங்களை ஏன் மயக்கவேண்டும்...” சீற்றமாகக் கேட்டவள், அங்கிருந்து விலக முயல, சட்டென்று அவள் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான் ஆதியதுலன். இப்போது அவள் திடமாகவே நின்றிருந்ததால், அவன் இழுத்த இழுப்புக்கு அசையாமல் அப்படியே நின்றவாறு தலையைத் திருப்பி அவனைப் பாரத்து முறைத்தாள்.
அவனோ அவளைத் தலை சரித்துப் பார்த்து,
“அப்படியில்லை என்றால், இன்று கடையிலிருந்து வந்ததும், நான் முகத்தைத் திருப்பியதைக் கண்டு ஏன் முகம் வாடினாய்?” என்றான் அடுத்து. அதைக் கேட்டவள் திகைத்துப் போனாள். அப்படியென்றால், அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தானா?
அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவள்,
“நான்... நான் எதற்கு வருந்த வேண்டும்? முதலில் நீங்கள் யார் எனக்கு? உங்களைக் கவரவேண்டிய அவசியம் எனக்கில்லை...” அவள் சொல்ல, அவனோ கிண்டல் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“அப்போ யாரை மயக்க இப்படி ஆடைகள் அணிகிறாய்?” என்றான் அதே பாவனையோடு. இப்போது நிதானமாக அவன் கரத்திலிருந்து தன் கரத்தை இழுத்த எடுத்தவள், அவனை நெருங்கி அழுத்தமாகப் பார்த்து,
“கனடாவில் 7.3 மில்லியன் இளைஞர்கள் இருக்கிறார்கள். அதில் என் வயதுக்குத் தக்கதாக இரண்டு மில்லியன் ஆண்களாவது இருக்கமாட்டார்களா? அவர்களைக் கவர்வதற்காக அணிகிறேன். போதுமா...?” கேட்டவள், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உப்பரிகையின் கதவைத் திறந்து வெளியேற, அதைக் கண்ட ஆதியதுலனின் உதடுகளில் இப்போது குறும்புப் புன்னகைத் தாராளமாக வெளிப்பட்டிருந்தது.
“கிரேசி கேர்ள்...” தனக்குள் முனங்கியவன், இப்போது தன் அறைக்குச் சென்று கதவைச் சாற்ற, இங்கே உப்பரிகையில் நின்றிருந்த நேயநறுமைக்கு சீற்ற மூச்சு உள்ளே வெளியே என்று போய் வந்துகொண்டிருந்தது,
(இந்த முன்னோட்டத்தை படிச்சு விட்டு, கதை அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோன்னு நினைச்சிட படாது. நிச்சயமாக வேறு விதமான அனுபவத்தை கொடுக்கும். அந்த அனுபவம் இரசனை கொண்டதா, இல்லயா என்கிறதை நீங்க படிச்சுதான் எனக்கு சொல்லணும். அதனால் உங்கள் நிஜமான விமர்சனதுக்காக
காத்திருக்கிறேன்.
எழுத்தாளர் விஜயமலர் அவர்களுக்கு நன்றி
புத்தகம் கிடைக்கும்
இடங்கள்
நன்றி




No comments:
Post a Comment